அறிமுக வீரராக களமிறங்குகிறார் நடராஜன்...!! ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு

சிட்னி; ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக நடராஜன் களமிறங்குகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று  நடக்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதல் இரு ஆட்டங்களை பொறுத்தவரை இந்திய அணி 300 ரன்களை கடந்து பேட்டிங்கில் ஓரளவு நன்றாகத் தான் செயல்பட்டது. ஆனால் பந்து வீச்சு படுமோசமாக அமைந்தது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமியின் பந்து வீச்சு எடுபடவில்லை. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 2 ஆட்டங்களையும் சேர்த்து 160 ரன்களை வாரி வழங்கியுள்ளார். கான்பெர்ரா மைதானமும் பேட்டிங்குக்கு உகந்தது தான். அதனால் பவுலர்கள் சரியான அளவில் பந்து வீசி நெருக்கடி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக நடராஜன் களமிறங்குகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 71 ‘யார்க்கர்’ பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்த தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைப்பது பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. தொடரை இழந்து விட்டாலும் அடுத்து வரும் தொடரை நம்பிக்கையுடனும், கூடுதல் உத்வேகத்துடனும் எதிர்கொள்வதற்கு இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி காண்பது முக்கியமாகும்.

Related Stories: