கலபுர்கி: வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கலபுர்கி-ஷஹாபாத் அருகேயுள்ள ரிங் ரோட்டில் சாலையில் வாகனங்களில் செல்வோரை முகமூடி அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கியும் மர்ம நபர்கள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து கலபுர்கி போலீசாருக்கு புகார்கள் வந்ததையடுத்து போலீசார் ரிங் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக தேஷ்பாண்டே, இக்பால் ரஜாக், முகமது இக்பால், அஸ்விக் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வி.வி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.