புதுடெல்லி: வீடு வாங்க விரும்பிய பலரிடம் இருந்து 400 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றிவிட்டு மாலத்தீவுக்கு தப்ப முயன்ற 36 வயது நபரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். துவாரகாவில் வசிக்கும் ஹரேந்தர் தோமர் என்பவர், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் கொள்கை முடிவின்படி வீடு வழங்குவதாக கூறி, நிலம் பதிவுச் செலவு என்ற பெயரில் சுமார் 4,000 வீட்டு உரிமையாளர்களிடமிருந்து 400 கோடிக்கு மேல் வசூலித்தார். பின்னர் வீட்டுக்கான நிலத்தை வழங்காமல் ஏமாற்றி வந்தார். நெருக்கடி அதிகரிக்கவே வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது, கொச்சின் விமான நிலையத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தோமரிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு இணை கமிஷனர் ஓபி மிஸ்ரா கூறியதாவது: கைது செய்யப்பட்ட தோமர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து “ஸ்ரீ சித்தி விநாயக் ரியல் எஸ்டேட் மற்றும் செக்கயூரிட்டிஸ்” என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். பின்னர், விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கி, பின்னர் அதை ரெவந்தா சொசைட்டிக்கு கொள்முதல் விலையை காட்டிலும் மூன்று மடங்கு லாபத்தில் விற்றார்.