எல்லாபுரம் ஒன்றிய ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவினர் இடையே திடீர் கோஷ்டி மோதல்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ மற்றும் ஒன்றிய செயலாளர் அணியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. பெரியபாளையம் பயணியர் மாளிகையில், எல்லாபுரம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர் கமலகண்ணன் கலந்துகொண்டார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் ஒன்றிய செயலாளர் கட்சி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது, ஒன்றிய அவைத்தலைவர் விஜயன் எழுந்து நின்று, ‘என்னை எந்த நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பதில்லை’ என கூறினார். இதைக்கேட்ட ரவிச்சந்திரன் தரப்பினர், ‘அவைத்தலைவர் எந்த கூட்டத்திற்கும் வருவதில்லை’ என்றார். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். பின்னர், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கமலக்கண்ணன் கூறும்போது, ‘வரும் சட்ட மன்ற தேர்தலில் இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கோஷ்டி பிரச்னை இருக்கக்கூடாது’ என்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: