மதுரை: பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதத்தில் செய்தி வெளியிட தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புககேழந்தி ஆகியோர் நேற்று காலை வழக்கம் போல் வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, ‘‘மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் செயல்படும் பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடத்திற்கு சமஸ்கிருத செய்தி தொகுப்பை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழியை திணிக்கும் வகையில் இச்செயல் உள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி மனு செய்கிறேன். அதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள் ‘‘மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்’’ என்றனர். இதைத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.