புதுடெல்லி: கடற்படையில் பயன்படுத்துவதற்கான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்தியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. ருத்ரம் -1 என்ற எதிர்ப்பு ஏவுகணை உட்பட மேம்படுத்தப்பட்ட பல்வேறு ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அருணாசலப் பிரதேசத்தில் சீனா உடனான அசல் கட்டுப்பாடு கோடு பகுதியில் பல முக்கிய இடங்களில் இந்தியா தரப்பில் ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடற்படையில் பயன்படுத்துவதற்கான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, அந்தமான் நிகோபர் தீவுகளில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமாக ஏவி, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில், ‘பிரமோஸ் ஏரோஸ் ஸ்பேஸ்’ நிறுவனமானது, போர்க்கப்பல்கள், விமானங்கள், நிலப்பரப்பில் இருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன.