டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகளில் தற்போது 53 பேர் உள்ளனர். 22 காலியிடங்கள் இருந்த நிலையில், 10 கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் ராஜீந்தர் காஷ்யப் அறிவித்துள்ளார்.
10 கூடுதல் நீதிபதிகளான கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமாற குருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராமராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்ரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் நீதிபதிகள் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நீதிபதிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் பதவியேற்க உள்ளனர். இதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. காலிப்பணியிடங்கள் 12ஆக குறைந்துள்ளது.