×

மும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது

திருச்சி: மும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை நேற்று இரவு முதல் துவங்கியது. மதுரை ஐகோர்ட் தடை நீக்கியதையடுத்து கொரோனாவால் மூடப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட் 8 மாதங்களுக்கு பின் கடந்த 27ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 3 நாட்களாக சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மாலையுடன் அப்பணிகள் முடிவடைந்தன. இதனையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு காந்தி மார்க்கெட்டில் உள்ள காந்தி சிலை முன் இந்து, கிறிஸ்து மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டுடன் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டது. முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, திருச்சி மாவட்ட தலைவர் தர், இளைஞரணி தலைவர் அப்துல்ஹக்கீம் மற்றம் மொத்தம், சில்லறை வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர். இரவு 9 மணி முதல் இன்று காலை 5 மணி வரை காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து காந்தி மார்க்கெட்டுக்கு லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்கின. அவற்றை உடனடியாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் இரவு 9 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 5 மணி வரை நடைபெறும். காய்கறிகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் காய்கறிகளை இறக்கிவிட்டு அதிகாலை 5 மணிக்குள் வெளியேறி விட வேண்டும். என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரம் காலை 5 மணிக்கு துவங்கி பிற்பகல் 2 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Trichy Gandhi Market , Vegetable sales at Trichy Gandhi Market started from night with Muslim worship
× RELATED திருச்சியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு