குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ அபய் பரத்வாஜ் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.!!!

டெல்லி; குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ அபய் பரத்வாஜ் (66) மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ்-க்கு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜ்கோட்டில் உள்ள மாநில அரசின் பண்டிட் தீண்டயல் உபாத்யாய் மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது ஆக்ஸிஜன் அளவு குறைந்த பிறகு, கடந்த செப்டம்பர் 15ம் தேதி அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சுமார் 40 நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அபய் பரத்வாஜ் காலமானார். இந்நிலையில், அபய் பரத்வாஜ் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ அபய் பரத்வாஜ் ஜி ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார். மேலும், சமூகத்திற்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்தார். தேசிய வளர்ச்சியில் ஆர்வமுள்ள, பிரகாசமான மற்றும் புத்திசாலித்தனமான மனதை நாம் இழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: