அண்ணா நகர்: சென்னை கோயம்பேடு மேம்பால பணி இந்த மாத இறுதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் மழையின் காரணமாக மேம்பால பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேட்டில் கடந்த 2015ம் ஆண்டு 93.5 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. இப்பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அலுவலகம் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இம்மாதம் இறுதிக்குள் பணியை முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேம்பால பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த பகுதியில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், திருமங்கலம் செல்லும் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் ஷேர்ஆட்டோ வரிசையாக நிற்பதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.