முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதிகளை முல்லைப் பெரியாறு அணை மூலம் நீண்டகாலமாக விவசாயிகள் பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி இந்த அணைக்கு பதிலாக புதிய அணை ரூ.1000 கோடி செலவில் கட்ட வேண்டுமென்று தொடர்ந்து கேரள அரசு கூறி வருகிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றமும், பல்வேறு வல்லுநர் குழுக்களும், நிபுணர்களும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து பலமாக இருக்கிறது என ஒருமுறைக்கு பலமுறை சான்றளித்த பிறகும், கேரள அரசும், அரசியல் கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக செயல்படுவது இரு மாநிலங்களுக்கிடையே இருக்கிற நல்லுறவை சீர்குலைத்து வருகிறது.

மேலும், முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு பசுமை தீர்ப்பாயத்திடமும், மத்திய நீர்வளத்துறையிடமும் அனுமதி பெற்று நில அளவீடு செய்ய தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசு அனுமதித்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதியாகும். என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: