×

கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!!

சென்னை,:கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதோருக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட  வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்து, அதை கடந்த செப்டம்பர் 4ம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பின்படி,  தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக்கவசம் அணியாதது, தனி மனித இடைவெளியை பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடிதிருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான விதிகளை பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக 200 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க புதிய அறிவிப்பு வகை செய்கிறது.
1939ம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியோருக்கு அதிகாரம் இல்லாததால், அவர்களுக்கு அதிகாரம் அளித்து அந்த சட்டத்தில் திருத்தமும் (பிரிவு 76(2)) கொண்டுவரப்பட்டது.அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ராமாபுரத்தை சேர்ந்த 77 வயதான ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடைபெற்று வந்தது. தமிழக அரசு தரப்பில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் குற்றம் என அறிவித்து ஏற்கனவே பல அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றிற்கான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு,  அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : court ,government ,Tamil Nadu ,High Court , Corona, Penalty, Government of Tamil Nadu, Chennai High Court, Tittavattam
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...