புதுடெல்லி: விசாரணைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில், கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது திகார் சிறையில் பதற்றம் ஏற்படுத்தியது. ஜகாங்கீர்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை தொடர்பான புகார் உள்பட 3 வழக்குகளில் தொடர்பிருப்பதாகக் கருதி தில்ஷேர் சிங்(23) எனும் வாலிபரை போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். அதே மாதம் 11ம் தேதி திகார் மத்திய சிறை எண் 3ல் அவர் அடைக்கப்பட்டார். அதே சிறையில் அடைபட்டு இருந்த விசாரணைக் கைதிகள் 3 பேர் சிங்குடன் நேற்று தகராறில் ஈடுபட்டனர். அதில், கூர்மையான ஆயுத்தால் சிங் குத்தப்பட்டார்.
தகராறு குறித்து சக கைதிகள் காவலர்களுக்கு உடனடியாக தெரிவித்ததில் விரைந்து வந்த அவர்கள், சிங்கை அந்த 3 பேரிடமிருந்து மீட்டனர். மேலும், ஆயுதத்தால் சரமாரி குத்து வாங்கி, ரத்தம் பீறிட சிங் உயிருக்கு போராடியதை பார்த்து திடுக்கிட்ட காவலர்கள் உடனே அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர் ஏற்கனவே இறந்துள்ளார் என காவலர்களிடம் மருத்துவமனையில் டாக்டர் தெரிவித்தார். சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதாக திகார் சிறைத்துறை டிஜி சந்தீப் கோயல் கூறியுள்ளார்.