திமுகவின் பிரசாரத்தை கண்டு அதிமுக அரசு அஞ்சி நடுங்குகிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

திருவாரூர்: திமுகவின் பிரசாரத்தை கண்டு அதிமுக அரசு அஞ்சி நடுங்குகிறது, ஊழலில் திளைக்கும் அதிமுக அரசுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள்  தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சிக்காக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, வடுவூர் தென்பாதி கிராமத்தில் வசிக்கும் திமுக  தொண்டர் மைக் ரவி வீட்டிற்கு நேரில் சென்று அவரின் உடல்நலம் குறித்து  விசாரித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:ரயில்வே  உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு,  தற்போது அவசர அவசரமாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள்  மூலம் விவசாயத்தையும், விவசாயிகளையும் கர்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு  வைத்துள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில்  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக  திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது.

துரைக்கண்ணு என்று பெயர் கூறினாலே மக்கள் 800  கோடி என கூறுகின்றனர். அந்த அளவிற்கு அதிமுகவின் ஊழல் அடித்தட்டு மக்கள்  மத்தியில் சென்றடைந்து உள்ளது. ஊழலில் திளைக்கும் அதிமுக அரசுக்கு வரும்  சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.மன்னார்குடி உள்ளிக்கோட்டை கிராமத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மன்னை  மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், திருவாரூர் எம்எல்ஏவுமான  பூண்டி கலைவாணன், மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. மேலத்  திருப்பாலக்குடி கிராமத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு இளம்பெண்  தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார்.  500க்கும் மேற்பட்ட இளம்பெண்  தொழில் முனைவோர்கள் உதயநிதி ஸ்டாலினோடு செல்பி எடுத்து கொண்டனர்.வடுவூர் கிராமத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தில்  300க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மலர்  கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories: