பொன்னேரி பேரூராட்சி பகுதிகளில் மந்தகதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் கடும் அவதி

பொன்னேரி: மந்தகதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் சாலைகளில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொன்னேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக  போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் தேவத்தம்மன் நகர், என்.ஜி.ஓ. நகர், பாலாஜி நகர், லட்சுமி அம்மன் கோயில் தெரு, திருவாயர்பாடி, சங்கர் நகர், புதிய பேருந்து நிலைய சாலை என பொன்னேரி பேரூராட்சியின் பெரும்பாலான சாலைகள் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ளது.

இதனால் சிறு மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறியுள்ளது. சாலைகள் நடந்து செல்லக்கூட முடியாமல் இதனால்  குடியிருப்புவாசிகள்  கடும் அவதியடைகின்றனர். இருசக்கர வாகனங்களை தங்களது தெருவுக்குள் கொண்டு செல்லாமல் சாலை சந்திப்பிலேயே நிறுத்திவிட்டு நடந்து செல்கின்றனர். அவசர தேவைகளுக்கு வெளியே செல்வோர், மருத்துவ சிகிச்சைகளுக்கு செல்ல வேண்டியவர்கள்  என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள்,  கர்ப்பிணி பெண்கள், முதியோர் என மருத்துவ சிகிச்சைகளுக்காக கடும் அவதிப்படுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்காமல் மோசமடைந்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.  சாலைகளில் மழைநீரும் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களை பரப்புகிறது.  மோசமடைந்துள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் பலனில்லை.  எனவே, உடனடியாக சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து பொதுமக்கள் சாலைகளில் எளிதாக சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: