பாலியல் தொல்லையால் டிரைவர் கொலை இளம்பெண் கைது: 3 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(36). மினி வேன் ஓட்டுனர். இவர் கடந்த 24ம் தேதி புதுப்பட்டு கூட்டு சாலையில் சராமரியாக வெட்டிகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜாவின் மனைவி சத்யதேவி(26) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது நாகராஜ் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரியவந்தது.

இதனால் சத்யதேவியின் தூண்டுதலின்பேரில் அவரது கணவர் ராஜா உள்பட 3 பேர் சேர்ந்து நாகராஜை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைக்கு காரணமான சத்யதேவியை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதில் ராஜா உள்பட 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக ராஜா(29), அஜித்(23), கார்த்திக்(26) ஆகிய 3 பேரும் செங்கல்பட்டு நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி 3 பேரும் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: