புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி 5 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த சென்னையை சேர்ந்த தன்னார்வலர் மீது ₹100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர உள்ளதாக சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலாரக பங்கேற்ற சென்னையை சேர்ந்த 40 வயது வர்த்தக ஆலோசகர், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கடுமையான நரம்பு மற்றும் உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, 5 கோடி கேட்டு சீரம் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.