11 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அடிப்படை சான்றிதழ் மருத்துவ ஆணையத்தில் சமர்பிப்பு: 1,650 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில் 26 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இந்நிலையில் மருத்துவ கல்லூரிகள் இல்லாத 11 மாவட்டங்களில், புதிதாக மருத்துவ கல்லுாரி துவங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை, அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளுக்கான அடிப்படை சான்றிதழை தமிழக சுகாதாரத்துறை தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சமர்பித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்கு, 2019 - 20ம் கல்வியாண்டில் அனுமதி கிடைத்தது. மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளன. அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும், முதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வித அடிப்படை மற்றும் முக்கிய சான்றிதழ்கள், தேசிய மருத்துவ ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர், நேரில் ஆய்வு செய்தப்பின், அனுமதி சான்றிதழ் வழங்கும். அனுமதி சான்றிதழ் கிடைத்தப்பின்பு அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டால் தமிழகத்தில் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

Related Stories: