சென்னை: திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேரா.கான்ஸ்டன்டைன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அருள்மொழி (திக), கோபண்ணா(காங்கிரஸ்), மகேந்திரன் (சிபிஐ), கனகராஜ் (சிபிஎம்), மல்லை சத்யா (மதிமுக), ரவிக்குமார் (விசிக), அப்துல் ரஹ்மான் (இயூமுலீ), அப்துல் சமது (மமக),சூர்ய மூர்த்தி (கொமதேக) ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் “மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து வரலாறு காணாத அளவில் விவசாயிகள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தலைநகரான டெல்லியை முற்றுகையிட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று தேசிய ஊடகங்களை மத்திய அரசு மிரட்டுகிறது.