மழைக்கு பிறகு பரவும் தொற்று நோய்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மருத்துவ நிபுணர்கள்

சென்னை: மழைக்கு பிறகு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  நிவர் புயல் காரணமாக வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. இதனால் சென்னையின் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தேங்கும் நீரால் மழைக்கால நோய் அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வீடுகளில் தேங்கி இருக்கும் மழை நீரில் இருந்து நோய்கள் பரவும். எனவே மழைக்கால நோய்கள் பரவாத வகையில் அனைத்து வீடுகளிலும் இருக்கக்கூடிய  நீர்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். மழைநீர் வடிந்த பின்னர் அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். நீரை காய்ச்சி குடிக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். டெங்கு, கொரோனா, மலேரியா என்று அனைத்து நோய்களுக்கு காய்ச்சல் தான் ஒரு அறிகுறி.

எனவே காய்ச்சல் வந்தால் உடனடியாக கொரோனா சோதனையுடன் இணைந்து டெங்கு சோதனையும் செய்து கொள்ள வேண்டும். முடிந்த வரையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: