சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜ அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 4 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி, அரியானா மாநில எல்லைக்கு அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிற வகையில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக விவசாயிகள் கருதுகிறார்கள். இதுவரை விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டத்தால் பறிக்கப்பட்டுள்ளது. தங்கள் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்கிற உரிமையை இழந்துள்ளனர்.