திருச்சியில் வேளாண் சட்ட நகலை ராக்கெட் செய்து மோடிக்கு அனுப்புவது போல் பறக்கவிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்!!

திருச்சி, : வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இன்று கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட 100 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். வேளாண் நகலை ராக்கெட் விட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 5ம் நாளாக இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவும், நிபந்தனையின்றி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது வேளாண் சட்ட நகலை ராக்கெட் செய்து மோடிக்கு அனுப்புவது போல் பறக்கவிட்டு கோஷமிட்டனர்.

இதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் தனது ஒரு பக்க தாடி மற்றும் மீசை மழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தர்ணாவில் ஈடுபட்ட 100 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது: விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவருகின்றனர். நல்ல தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகராமல் தொடர்் போராட்டம் நடைபெறும் என்றார்.

Related Stories: