×

காரியாபட்டி அருகே கடலையை நாசம் செய்யும் காட்டுப்பன்றி: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

காரியாபட்டி: காரியாபட்டி அருகே, கடலை சாகுபடியை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால், இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு, தர்மாபுரம், புதுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விளைநிலங்களில் இரவில் வரும் காட்டுப்பன்றிகள், கடலைச் செடிகளை நாசம் செய்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடலை மட்டுமல்லாமல் சோளம், கம்பு பயிர்களையும் காட்டுப்பன்றிகள் நாசம் செய்கின்றன. தருமபுரத்தில் மோகன் என்ற விவசாயி, இரண்டு ஏக்கரில் கடலை சாகுபடி செய்திருந்தார். அவரது விளைநிலத்தில் நேற்று முன்தினம் புகுந்த காட்டுப்பன்றிகள் கடலைச் செடிகளை தோண்டி நாசம் செய்துள்ளது.

இது குறித்து மோகன் கூறுகையில், ‘2 ஏக்கரில் கடலை சாகுபடி செய்தேன். லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. ஒருபுறம் புயல், மழையால் விவசாயம் பாதிக்கப்படும் சூழலில், காட்டுப்பன்றிகளும் கடலையை சேதம் செய்கின்றன. இதனால், லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Kariyapatti , Farmers, peanuts
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி