×

குளித்தலை காவேரி நகரில் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம், பீதி

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை நகர மையப்பகுதியில் உள்ளது காவேரி நகர். இப்பகுதியில் வங்கிகள், தனியார் மருத்துவமனைகள், அரசு அண்ணா சமுதாய மன்றம், மாணவர் விடுதி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நூலகம், தினசரி காய்கறி சந்தை, உழவர் சந்தை ஆகியவை உள்ளன. மேலும் இப்பகுதியில் ஏராளமானோர் இருசக்கர வாகனத்திலும், நடந்தும் செல்வது வழக்கம். இந்நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காவேரி நகர் பகுதியில் மாடுகளை கூட்டம் கூட்டமாக அவற்றின் உரிமையாளர்கள் காலையில் அவிழ்த்து விட்டால் இரவு வரை கண்டுகொள்வதில்லை.

காவேரி நகர் பகுதியில் உள்ள சாலையில் மாடுகள் படுத்துக்கொண்டு எழுந்திருப்பது இல்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் வருவோர் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. காய்கறி சந்தைக்கு நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் இதே சாலையில் தெரு விளக்கு இல்லாத இடங்களில் கருப்பு நிறம் கொண்ட மாடுகள், மாநிறம் உள்ள மாடுகள் படுத்துக் கிடப்பதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தெரியாமல் மாடுகள் மீது மோதும் நிலை ஏற்பட்டு ஒரு சில நேரங்களில் விபத்துகளும் நடந்ததாக கூறப்படுகிறது. ஆகவே குளித்தலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் துரித நடவடிக்கை எடுத்து குளித்தலை நகரத்தில் சுற்றி திரிந்து சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் படுத்து கிடக்கும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,Kulithalai Kaveri , Road, cow
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...