×

விதிமீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் அமைப்பு

ஊட்டி: ஊட்டிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நகரில் முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள், சுற்றுலாதலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் ஊட்டி - கூடலூர் சாைல, கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஆகிய சாலைகளில் அதிநவீன தானியங்கி வாகன பதிவெண்களை பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நாளை (1ம் தேதி) முதல் ெசயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மாவட்ட எஸ்பி. தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்பி. சசிமோகன் கூறுகையில், ‘‘ஊட்டியில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்கள் சேரிங்கிராஸ் சந்திப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. 5 வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்களும், 4 கண்காணிப்பு கேமராக்களும் என மொத்தம் 9 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மட்டுமின்றி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் கூடலூர் சாலை, கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர் சாலை ஆகியவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் பைபர் கேபிள் இணைப்பு வழியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுபாட்டு அறையில் பதிவாகும் வகையிலும், கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் தானியங்கி முறையில் எடுக்கப்பட்டு பின்னர் அவர்களின் முகவரிக்கு அல்லது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ விதிமீறல் தகவல் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதி http://echallan.parivahan.gov.in/ என்ற வலைதளத்தின் மூலமாக நெட் பேங்கிங், எஸ்பிஐ., பேமன்ட் கேட்வே மற்றும் ஏடிஎம்., அட்டை மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி முறை கண்காணிப்பு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை முதல் தானியங்கி கண்காணிப்பு முறை முழுமையாக செயல்பட துவங்கும், என்றார்.

Tags : Cameras
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...