பென்னாகரம்: விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, நேற்று தர்மபுரி மற்றும் பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே சுற்றுலா பயணிகள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் குளிரும் வாட்டி எடுத்தது. மெயினருவி, ஐந்தருவி மற்றும் தொங்கு பாலம், முதலை பண்ணை, மீன்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தும், மெயினருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து கோத்திக்கல்மடுவு பரிசல் துறையில் பரிசலில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. ஒகேனக்கல் காவிரியில் தற்போது நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டுள்ளது.