பண்ருட்டி, நவ.30: பண்ருட்டி அருகே தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 28 மணி நேரம் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுகிசந்திரன்(62) தொழிலதிபர். இவரது மகன் முத்துகுமரன்(42) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேம்பால கட்டுமான பணி மேலாளராக உள்ளார். சுகிசந்திரன் அப்பகுதியில் விவசாயம் மற்றும் ரைஸ்மில் நடத்தி வரும் நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சொத்து வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு 11 மணி அளவில் மும்பை மற்றும் சென்னை வருமான வரித்துறையினர் 11 பேர் கொண்ட குழுவினர், சுகிசந்திரன் வீட்டில் அதிரடி சோதனையை தொடங்கினர்.