தொடரை வென்றது ஆஸ்திரேலியா..! இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் காலை 9.10க்கு தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபின்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக, ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 104 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 77 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச்  69 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்னல் லாபஸ்சாக்னே 61 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தும், ஹென்ரிக்ஸ் 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமால் விளையாடினர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 389 ரன்கள் ஆஸ்திரேலிய அணி எடுத்தது.

தொடர்ந்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 89, கே.எல்.ராகுல் 76, ஸ்ரேயாஸ் ஐயர் 38, ஷிகர் தவான் 30, மயங்க் அகர்வால் 28, ஹர்திக் பாண்டியா 28, ரவீந்திர ஜடேஜா 24, நவ்தீப் சைனி 10, யுவேந்திர சாஹல் 4, முகமது ஷமி 1 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டியிலும் வென்றதன் மூலம் தொடரின் வெற்றியை ஆஸ்திரேலிய அணி உறுதிப்படுத்தியது.

Related Stories: