இன்று 2வது ஒருநாள் போட்டி பதிலடி கொடுக்குமா இந்தியா? தொடரை கைப்பற்ற ஆஸி. முனைப்பு

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2வது ஒருநாள் போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 9.10க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் இந்தியா களமிறங்குகிறது. வீரர்கள் தேர்வில் பாரபட்சம் காட்டுவதாக கேப்டன் கோஹ்லி மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில், சரியான அணியை தேர்வு செய்தால் மட்டுமே பலம் வாய்ந்த ஆஸி. அணிக்கு பதிலடி கொடுக்க முடியும்.

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் களமிறக்கப்படுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதல் போட்டியில் தவான், பாண்டியா, ஷமி மட்டுமே சிறப்பாக விளையாடினர். முன்னணி வீரர்களான மயாங்க், ராகுல், ஷ்ரேயாஸ் போன்றவர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுவில்லை. பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் வகையில் மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். எனவே முதல் வெற்றிக்கு முயற்சிக்கும் இந்திய அணியில் இன்று நிச்சயமாக மாற்றம் இருக்கும். சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவா, ஷர்துல் தாகூரா என்பது விராத்தின் விருப்பத்தை பொறுத்தது. ஆனால் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கலக்கும் ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றம் இருக்காது. காயமடைந்துள்ள  மார்கஸ் ஸ்டாய்னிசுக்கு பதிலாக வேறு வீரர் களம் இறக்கப்படலாம். இளம் வீரரான கேமரான் கிரீனுக்கு கூட இன்று சர்வதேச போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கலாம்.பதிலடி கொடுக்க இந்தியாவும், தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: