உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதன்மை மாநிலம்: மருத்துவர்களுக்கு முதல்வர் நன்றி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இதுவரை 1392 கொடையாளர்களிடம் இருந்து 8245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 3005க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், புதுக்கோட்டையில் நடைபெற்ற உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தானில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர். இந்த சாதனைகள் முறையே கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும், ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழ்நாடு மாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் கோவிட்-19 பெரும் தொற்று காலத்திலும் சிறப்பு நெறிமுறைகளை உருவாக்கி, 97 உடலுறுப்புகளை 27 உறுப்பு கொடையாளிகளிடம் இருந்து பெற்று, தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழக அரசு சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில், தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக முதன்மை மாநிலம் என்ற விருதினை மத்திய அரசிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: