டெக்ரான்: ஈரானின் ராணுவ ஆலோசகரும், மூத்த அணு விஞ்ஞானியுமான மொஹ்சென் பக்ரிசாதே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. இதனால், ஈரான் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படுகொலையால் ஆவேசம் அடைந்துள்ள ஈரான் அதிபர் ரவுகானி, ‘இதற்கு சரியான நேரத்தில் பழி தீர்ப்போம்’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ராணுவத்தினர் பதுங்கிப் பாய்ந்து தாக்குவது போல, ஒரு விஞ்ஞானியை மறைந்திருந்து வழி மறித்துக் கொன்றுள்ளனர். கவனமாகத் திட்டமிட்டு இந்த படுகொலை நடந்துள்ளது. பக்ரிசாதேவை கொன்று விட்டதால் ஈரானின் அணுசக்தித் திட்டம் முடங்கி விடாது. மேற்கத்திய நாடுகள் ஈராக்கின் அணுசக்தி திட்டத்தின் மீது கொண்டுள்ள பயத்தையே இந்த தாக்குதல் காட்டியுள்ளது. பக்ரிசாதே படுகொலைக்கு உரிய நேரத்தில் பழி தீர்க்க்பபடும்,’’ என்றார். இந்த படுகொலைக்கு இஸ்ரேல் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் சந்தேகம் தெரிவித்துள்ளது.