திருவனந்தபுரம்: கொரோனா காரணமாக சபரிமலையில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பேரும், சனி, ஞாயிறு கிழமைகளில் 2000 பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும் என்று தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநில பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், திருவிதாங்கூர் தேசவம் தலைவர் வாசு சபரிமலையில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சபரிமலையில் 27ம் தேதிவரை 13,529 பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் கோயில் வருமானமும் குறைந்துள்ளது. கடந்த 12 நாட்களில் 2 கோடிக்கு குறைவாகவே வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 50 கோடி வரை வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதித்தால் 30ம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க தயாராக உள்ளோம்,’’ என்றார்.