கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் செயலர் திடீர் தற்கொலை முயற்சி

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக இருப்பவர் என்.ஆர்.சந்தோஷ், நேற்று முன்தினம் இரவு திடீரென இவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு சரியான நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து தப்பியுள்ளார். இது குறித்து அவரது மனைவி ஜான்வி கூறுகையில், ‘‘அலுவலகத்தில் இருந்து இரவு வந்தபின், குளித்துவிட்டு மேல்மாடியில் உள்ள அறைக்கு சென்று விட்டார்.  நான் சென்றபோது, மயங்கிய நிலையில் இருந்தார். அருகில் தூக்க மாத்திரை பாட்டில் இருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். சில நாட்களாக அரசியல் நெருக்கடி இருந்தது. மன உளைச்சலுடன் இருந்தார்,’’ என்றார். இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சந்தோஷ் மீது சதாசிவ நகர் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 309வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: