லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணத்துக்காக கட்டாய மத மாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை விதிப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமணத்துக்காக குறிப்பாக பெண்கள் மத மாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என, கடந்த மாதம் உத்தர பிரதேசத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தபோது முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். ‘நேர்மையற்ற முறையில் செய்யப்படும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்,’ என அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய வரைவு சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. இதற்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய மத மாற்றத்தை தடுப்பதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.