புதுடெல்லி: நிரந்தர தலைமை நியமிக்கப்படாததால் நான்கு மத்திய போலீஸ் அமைப்புகள் வழக்கமான தலைமையின்றி செயல்பட்டு வருகின்றன. தேசிய முக்கியத்துவம் பெற்ற ‘என்எஸ்ஜி’ எனப்படும் தேசிய பாதுகாப்பு படை, என்சிபி எனப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பிபிஆர்டி எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் ஆகியவற்றின் தலைமை பொறுப்புகள் ஏற்கனவே காலியாக உள்ளன. தேசிய பாதுகாப்பு படைப்பிரிவு தலைவர் ஏகே சிங் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த பொறுப்பானது இந்தோ-திபெத் படை தலைவர் எஸ்எஸ் தேஸ்வாலிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை தலைவர் ராகேஷ் அஸ்தனா, கடந்த ஜூலை முதல் கூடுதலாக போதைப் பொருள் தடுப்பு பிரிவை கவனித்து வருகிறார். இதேபோல், சிறப்பு செயலாளர் விஎஸ்கே கமுதிக்கு போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.