சென்னை: மணலி புதுநகர் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த ரவி (56), நேற்று முன்தினம் காலை மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த ரவி, கூச்சலிட்டபடி அவர்களை துரத்தினார். அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்டலின் ரமேஷ் இதை பார்த்து, தனது பைக்கில் கொள்ளையர்களை விரட்டினார். சினிமா காட்சி போல் போலீசிடம் சிக்காமல் கொள்ளையர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்ல, எஸ்ஐ விடாமல் துரத்திச் சென்றுள்ளார். சாஸ்திரி நகர் அருகே கொள்ளையர்கள் சென்ற பைக் தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். உடனே, எஸ்ஐ அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் ஓட்டம் பிடிக்க, மற்றொருவர் மீண்டும் பைக்கில் தப்பிக்க முயன்றார்.
அப்போது, எஸ்ஐ ரமேஷ் தனது பைக்கை கீழே போட்டுவிட்டு, பைக்கில் தப்ப முயன்ற நபரை மடக்கி பிடித்தார். விசாரணையில், சர்மா நகரை சேர்ந்த அருண்ராஜ் (20) என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் தப்பிய மாத்தூரை சேர்ந்த நவீன்குமார் (23) மற்றும் அவரது நண்பர் ராயபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் ராயபுரம், மாதவரம் பகுதியில் 4 நபர்களிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களை சிறையில் அடைத்தனர். இதுபற்றி அறிந்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், எஸ்ஐயை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.