8 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

ராமேஸ்வரம்: நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, எட்டு நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர். நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 800க்கும் அதிகமான விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக கரை நிறுத்தப்பட்டது. மீனவர்கள் மாற்று வேலைக்கு சென்றனர். இந்த நிலையில், நிவர் புயல் கரையை கடந்தது. பாக்ஜல சந்தி கடலில் வழக்கமான நிலை திரும்பியது.

 

இதையடுத்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க செல்ல நேற்று அனுமதி அளித்தனர். இன்று காலை மீன்துறை அலுவலகத்தில் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்கிய 400க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஐஸ்கட்டி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை படகில் ஏற்றிக் கொண்டு மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர். 8 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு செல்வதால், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: