கண்ணாடி துண்டுகள் மீது நின்றபடி 3 மணி நேரம் கரகம் ஆடி சாதனை

கோவை, :புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கோவை நாட்டுப்புற கலைஞர், கண்ணாடி துண்டுகள் மீது நின்றபடி 3 மணி நேரம் கரகம் ஆடி சாதனை படைத்தார்.கோவையை சேர்ந்தவர் நாட்டுப்புற கலைஞர் கலையரசன். காந்திமாநகரில் கிராமிய புதல்வன் அகாடமி எனும் கிராமிய கலை பயிற்சி மையம் நடத்தி வரும் இவர் இளைய தலைமுறை இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைகளை கற்று தருவதோடு கிராமிய கலைகளில் பல சாதனைகளை செய்ய ஊக்கம் அளித்து வருகிறார்.

இவர் தலையில் கரகம் வைத்தபடி கண்ணாடி துண்டுகள் மீது நின்றபடி தொடர்ந்து மூன்று மணி நேரம் கரகாட்டம் ஆடி சாதனை முயற்சியில் ஈடுபட்டார். நோபள் புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இதற்கான சான்றிதழை தீர்ப்பாளர் தியாகு நாகராஜன் வழங்கி கவுரவித்தார். கரகாட்டத்தை கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் சாகுல் அமீது துவக்கி வைத்தார். கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம் ஆடிய கிராமிய புதல்வன் கலையரசன் தனது சாதனை முயற்சி குறித்து கூறுகையில், ‘‘புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டேன். அண்மையில் புற்றுநோயால் மறைந்த திரைப்பட நடிகர் தவசிக்கு இந்த சாதனையை அர்ப்பணிக்கிறேன்’’ என்றார்.

Related Stories: