×

₹800 கோடி விவகாரம்: துரைக்கண்ணுவின் உறவினர் வீடுகளில் பணம் பதுக்கல்?

சென்னை,:₹800 கோடி விவகாரத்தில் அமைச்சர் துரைக்கண்ணுவின் வீட்டிலிருந்து சமீபத்தில் நள்ளிரவு 6 பேக்குகளில் காரில் கொண்டு செல்லப்பட்ட பணம் அவரது அண்ணன் மகன் மற்றும் மகள் வீடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாகவும், போலீசுக்கு தெரிந்தால் அசிங்கமாகுமே என அச்சத்தில் உறவினர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கட்சியை பலப்படுத்த, கட்சி தலைமை கொடுத்த ₹800 கோடியில் 50 சதவீத பணம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதி 50 சதவீத பணத்தை மீட்க விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் துரைக்கண்ணு உயிருடன் இருந்தபோது கும்பகோணம் காளிமுத்து நகரில் பினாமி ஒருவரின் பெயரில் புதிய வீடு ஒன்றை வாங்கினார். அவர் இறந்த பின் அந்த வீட்டிலிருந்து நள்ளிரவு 6 பேக்குகளில் கட்டுக்கட்டாக பணம் எடுத்துச்செல்லப்பட்டு காரில் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்பட்டது. அந்த பணம் எங்கு பதுக்கப்பட்டுள்ளது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பணம் துரைக்கண்ணுவின் அண்ணன் மகன் மற்றும் மகள் ஒருவரின் வீடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அரசு பள்ளி தலைமையாசிரியராகவும், மகள் ஆசிரியையாகவும் உள்ளனர். போலீசார் விசாரணை வளையத்துக்குள் தாங்கள் சிக்கிவிட்டால் அசிங்கமாகிவிடுமே என அவர்கள் அச்சத்தில் உள்ளனராம். இதனால் என்ன செய்வது என்று 2 பேரும் உறவினர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

Tags : துரைக்கண்ணுவின், cousin, money, hoarding
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...