ஆளுங்கட்சியினர் டார்ச்சர் : பஞ்சாயத்து தலைவி தர்ணா

திண்டுக்கல்,: திண்டுக்கல் அடுத்துள்ள முள்ளிப்பாடி பஞ்சாயத்தில் பணிகளை செய்ய விடாமல் ஆளுங்கட்சியினர் டார்ச்சர் கொடுப்பதாக கூறி பெண் பஞ்சாயத்து தலைவர் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மாதவி. துணைத்தலைவராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி.  வார்டு உறுப்பினர்களான பிச்சைமணி, திருமலைச்சாமி, முரியஜெயசீலி, ஜான்பீட்டர், கிருஷ்ணமூர்த்தி, காளியம்மாள், ராக்கம்மாள், பாப்பாத்தி, லட்சுமிராஜா, ஜெயலட்சுமி ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தலைவர் மாதவியை பணிகளை செய்யவிடாமல் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளனர். மேலும் துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தான்தான் முள்ளிப்பாடி பஞ்சாயத்து தலைவர் என செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி உள்ளார்.  மனவேதனை அடைந்த பஞ்சாயத்து தலைவர் மாதவி நேற்றிரவு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நியாயம் கேட்டு நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பாதிக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்  மாதவி வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: