தமிழக-கேரள எல்லையில் உள்ள விவசாயிகள் இனி கேரள செல்ல சோதனை தேவையில்லை: இ-பாஸ் மட்டும் இருந்தால் போதும்: கேரள அரசு

கம்பம்: ஏலத் தோட்ட விவசாயிகள் இனி கேரளா செல்ல இ- பாஸ் மட்டும் இருந்தால் போதும் என கேரள அரசு அறிவித்துள்ளது. குமுளி எல்லையில் நாள்தோறும் பாஸ் சரிபார்ப்புக்குக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து எல்லைப் பகுதியான கேரளவிற்கு உட்பட்ட இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய தொழிலாளர்கள் ஜீப் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். கொரோனா அசாதாரண சூழல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் தொழிலாளர்கள் கேரளா இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதிலும், பல்வேறு கட்ட சோதனைக்கு பின்பு தான் அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தளர்வுகளுடன் கூடிய ஆறுமாத ரெகுலர் பாஸ் வழங்கப்பட்டது.

இதன்படி ஒரு முறை பாஸ் எடுத்தால் நாள்தோறும் காலையில் சென்று மாலையில் திரும்ப வேண்டும், ஒவ்வொரு நாளும் குமுளியில் கேரள வருவாய்துறையிடம் இ-பாஸ் பதிவு செய்து டோக்கன் மட்டும் பெற்றால் போதும், மற்று சோதனைகள் இல்லை என்றும் தெரிவித்தனர். இருப்பினும் தமிழக எல்லையான குமுளி பகுதியில் நாள்தோறும் டோக்கன் பெற பொதுமக்களும், தொழிலாளர்களும் வாகனங்களுடன் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர். இதனால், கேரளா செல்ல அனுமதித்துள்ள இ- பாஸை ரத்து செய்ய தொழிலாளர்கள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கேரள அரசு இ-பாஸில் மேலும் தளர்வுகளை அளித்துள்ளது.

இதன்படி குமுளி, சின்னாறு, போடிமெட்டு வழியாக கேரளாவுக்கு செல்பவர்கள் இ-பாஸ் சரிபார்ப்பு, டோக்கன் பெறுதல் என காத்திருக்க வேண்டியதில்லை. இ - பாஸ் பதிவு செய்திருந்தால் மட்டும்போதும், அதை எல்லைப்பகுதியில் உள்ள போலீஸாரிடம் காட்டிவிட்டு செல்லலாம் என அறிவித்துள்ளது. இதனால், கேரளா செல்லும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமுளி வழியாக கேரளாவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று மட்டும் இயக்கப்பட்டது. ஆனால், குமுளி மலைச்சாலையில் சாலைப்பணிகள் நடைபெறுவதாகக்கூறி ஒரு டிரிப்போடு போக்குவரத்து நிர்வாகம் அதை ரத்து செய்துவிட்டது.

Related Stories: