×

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என வரிசையில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி கொண்டு வர பாஜ முயற்சி : முத்தரசன் பரபரப்பு பேட்டி

திருச்சி : ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என வரிசையில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி கொண்டு வர பாஜ முயற்சி செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.
காரல் மார்க்ஸ்ஸின் நண்பன் ஏங்கல்ஸ்ஸின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரின் படத்திற்கு அதன் மாநில செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது : ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என இறுதியில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல மத்திய பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து. இதை முறியடிக்கக் கூடிய வகையில் அனைத்த ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் ஒரு போதும் மக்களின் இழப்பை ஈடு செய்யாது. அடிப்படையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை அரசு முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.மத்திய அரசின் நிர்பந்தத்தின் மூலம் உச்சநீதிமன்றம் இதை கூறியுள்ளது. இது போன்ற செயல்கள் இட ஒதுக்கீடு என்பதை முழுமையாக இல்லாமல் செய்யும் முயற்சி. இது சமூக நீதிக்கு எதிரானது. இதை எதிர்த்தும் மக்கள் போராட வேண்டும்.

ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. நாடு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது என பிரதமர் கூறுவது வெறும் காரணங்கள்தான். ஆனால் அவர்களின் நோக்கம் என்பது வேறு.நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு யுத்தத்தை நடத்துகிறது. அந்த யுத்தத்திற்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். பல அடக்குமுறைகளை கடந்தும் விவசாயிகள் போராடிய காரணத்தால் வரும் 3ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Tags : BJP ,party ,government ,country ,election ,interview , BJP, Mutharasan, agitation, interview
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை