திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த 2 மாதத்துக்கு மேலாக வந்துகொண்டிருக்கிறது. தற்போது பெய்த கனமழை மற்றும் ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் வந்துகொண்டிருப்பதால் பூண்டி நீர்த்தேக்கம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று காலை 2142 மில்லியன் கன அடியாக இருந்த நீர் மாலை 2500 மில்லியன் கன அடியாக உயர்ந்ததால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை 5.45 மணி அளவில் 250 கன அடி வீதம் 5, 6, 11 மற்றும் 14 ஆகிய 4 மதகுகள் வழியாக 1000 கன அடி தண்ணீரை திறந்து விட்டனர்.
நேற்றிரவு தண்ணீர் வரத்து அதிகமானது.பூண்டி நீர்த்தேக்கத்தின் 35 அடி உயரத்தில் 33.74 அடி உயரத்திற்கும் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில் 2 ஆயிரத்து 742 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகமானது. இது நேற்றிரவு படிப்படியாக உயர்த்தி 5 ஆயிரத்து 933 கன அடி வரை தண்ணீரை திறந்து விட்டனர். இன்று காலை 11 மணி வரை 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை வெளியேற்றப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு பூண்டி ஏரியில் உபரி நீரை வெளியேறுவதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். நீர்த்தேக்கம் அருகே ஒதப்பை, ரங்காபுரம் போன்ற 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலமும் மூழ்கியது. ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சாகசம் செய்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.