உடுமலை: அமராவதி நேரடி பாசன பகுதியான கல்லாபுரம், ராமகுளம் வட்டாரத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. 2800 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். மீதி இடங்களில் கரும்பு, தென்னை, மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர். நெல் வயல்களில் தற்போது நெற்கதிர்கள் பால் பிடித்து விளையும் தருவாயில் உள்ளன. ஏற்கெனவே பல்வேறு நோய் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், காட்டுப்பன்றிகளும் வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை துவம்சம் செய்கின்றன. இதை தடுக்க விவசாயிகள், நெல் வயலை சுற்றிலும் சேலையால் வேலி கட்டி உள்ளனர். காற்றில் சேலைகள் படபடக்கும்போது பயந்து காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் வருவதில்லை. இதனால் பயிர்கள் பாதுகாக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.