சென்னை: அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு அமைத்த விசாரணைக்குழு தலைவரும் ஒய்வு பெற்ற நீதிபதியுமான கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார். துணை வேந்தர் சூராப்பா மீது மின்னஞ்சலில் வந்த புகார்களை நீதியரசர் ஆய்வு செய்து வருகிறார். புகார்கள் உண்மையாக இருந்து ஆதாரங்கள் இருந்தால் சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலை கழக துணவேந்தரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறினார். துணை வேந்தர் சூராப்பா மீது புகார் இருந்தால் நேரிலும் மின்னஞ்சல் மூலமாகவும் புகார்களை அளிக்கலாம் என ஏற்கனவே நீதியரசர் தெரிவித்திருந்தார். எனவே புகாரின் அடிபடையில் உண்மை கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவற்றை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு விசாரணை குழுவை அமைத்தது.
இந்த ஆணையத்துக்கு உதவ, உயர் கல்வி துறை துணைச் செயலாளர் சங்கீதா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி., பொன்னி, உயர்நீதிமன்ற, சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சாய் பிரசாத், ஓய்வு பெற்ற நிதித்துறை கூடுதல் செயலாளர் முத்து ஆகியோரையும் தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும், ஆணையத்துக்கு, தனிச் செயலாளர், தட்டச்சர், டி.எஸ்.பி. அளவிலான அதிகாரி, நீதிமன்ற அலுவலர், உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் என்று 8 பணியாளர்களையும் உயர்கல்வித்துறை புதிதாக நியமித்தது. பசுமை வழிச் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தை, ஆணையத்தின் அலுவலகமாக ஒதுக்கி அரசு உத்தரவிட்டது.