சென்னை: தமிழகத்தில் புதிய தளர்வுகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி சென்னை தலைமைச் செயகத்தில் இருந்து காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் பற்றி ஆலோசித்து வருகிறார். நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியற்றை கணக்கில் கொண்டும் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து அமலில் உள்ளது. அந்த வகையில் இன்னும் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மெரினா கடற்கரை உள்பட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேர்களுக்கு மேல் கூடும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை.