சென்னையில் இயல்புநிலை திரும்பியது: வெயில் அடித்ததால் மக்கள் உற்சாகம்

சென்னை:  `நிவர்’’ புயல் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கடந்த 25ம் தேதி நிவர் புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததுடன் சூறாவளி காற்றும் வீசியது. புயல் கரையை கடந்த பிறகு நேற்று முன்தினமும் விட்டு விட்டு லேசான மழை மற்றும் வேகமான காற்றும் வீசியது. புயல் சென்னை அருகே கடக்கும் என்பதால், தமிழக அரசு 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாள் பொது விடுமுறை அறிவித்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் மக்கள் இரண்டு நாட்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

நேற்று காலை 8 மணிக்கு மேல் சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு சூரிய வெளிச்சத்தை பார்க்க முடிந்தது. மழையும் முழுவதுமாக விட்டிருந்தது. இதனால் மக்கள் சந்தோஷப்பட்டனர். இதையடுத்து சென்னை மக்கள் வழக்கம்போல் இரண்டு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு வழக்கமான பணிக்கு திரும்பினர். இதனால் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் நேற்று வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

ஆனாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த மழை காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலையும் இருந்தது. அதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டும் குழியுமான சாலைகளை சரிசெய்து பொதுமக்கள் வாகனங்களில் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories: