டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பு ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் தலையிட முடியாது: ஐகோர்ட்

சென்னை: தமிழகம் உள்பட 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன்  94 வருடங்களாக செயல்பட்டு வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு கடந்த 17ம் தேதி முதல் வர்த்தக தடையை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. பாரம்பரியமிக்க இந்த வங்கியில் நிதி பிரச்னை ஏற்பட்டதால் லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.  இந்த இணைப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏயுஎம் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், வங்கிகள் இணைப்பு முறையான வங்கி ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நடைபெறவில்லை. இதனால் லக்ஷ்மி விலாஸ் வங்கியின்  பங்குதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே இந்த இணைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, நீதிபதி  எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேநேரத்தில் லஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரர்களின் நலனை டிபிஎஸ் வங்கி பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: