நிவர் புயல் கரையை கடந்ததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தன. இதேபோல், பயணிகள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், தற்போது புயல் கரையை கடந்து தெளிவான வானிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்தது. உள்நாட்டு முனையத்திலிருந்து நேற்று வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு 102 விமானங்கள் இயக்கப்பட்டன.

இதில் சுமார் 11,700 பேர் பயணிக்க முன்பதிவு செய்திருந்தனர். மேலும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து 102 விமானங்கள் சென்னை வந்தன. இதில் பயணிக்க 9,350 பேர் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 204 விமானங்களில் 21 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பயணித்தனர். இந்த எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்ததாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையின்போது இருந்த பயணிகள் கூட்டத்தைவிட நேற்று உள்நாட்டு முனையத்தில் பயணிகள் கூட்டமும், விமானங்களும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: