பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது, சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாஜவும், ஐக்கிய ஜனதா தள தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதிஷ் குமாரும் தனிப்பட்ட முறையில் தனது தந்தை லாலு மற்றும் குடும்பத்தை விமர்சித்தது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ஆத்திரப்பட்டார். அதோடு, நிதிஷ் குமார் மீதுள்ள பழைய ஊழல் புகார், கிரிமினல் குற்றச்சாட்டை பற்றி அடிக்கடி பேசினார்.
இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நிதிஷ், ‘‘தேஜஸ்வி கூறவதெல்லாம் அபத்தமான பொய். அவர் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு நான் வாய் மூடி இருக்கிறேன் என்றால், அதற்கு ஒரே காரணம், அவர் என்னோட நண்பனும், சகோதரனாகவும் இருப்பவரின் மகன் என்பதால்தான். அவரது அப்பாவை சட்டமன்ற தலைவராக்கியது யார் தெரியுமா? தேஜஸ்வியை துணை முதல்வராக்கியது யார் தெரியுமா? வாய் இருக்கிறது என்பதற்காக எதையாவது பேசக்கூடாது. என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், இன்னும் தேஜஸ்வி பொய் கூறுகிறார். பொறுப்பதற்கும் எல்லை உண்டு’’ என ஆவேசமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.